Wednesday, August 5, 2009

சிங்கவரம் அரங்கநாதஸ்வாமி ஆலயம்



செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். இது பல்லவர் காலத்தில் சிங்கபுர நாட்டின் தலைநகராக இருந்தது. முதலாம் மகேந்திர வர்மன் தந்தை சிம்ம விஷ்ணுவின் காலத்தில் இந்த நகரம் ஏற்பட்டிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது , இது
செஞ்சிக்கு வடக்கே ஐந்து கிமீ தூரம் உள்ளது இக்கோயில் ம்லையின் மேல் இருப்பதால் 125 படிகளைக் கடக்க வேண்டும் எல்லோரா போல் ஒரே பாறையைக்குடைந்து செய்யப் பட்டக்கோயில், இந்தப்பாறையிலேயே முன் புறம் இரு தூண்கள் மிகப்பெரிய அளவில்நிற்க உள்ளே நீண்ட கருவறை தெரிகிறது அங்கு ஆதிசேஷன் சுருண்டு கிடக்க அந்தப்படுக்கையில் அனந்த சயனமாக அரங்கன் சயனித்திருகிறார். தலையைச் சற்று தூக்கியவாறு, வலது திருக்கரத்தைக் கீழே தொங்க விட்டபடி, இடது கையை மேற்புறமாக மடித்து, கடக முத்திரையைக் காட்டி ஐந்து தலை நாகத்தின் மேல் திருமால் அழகுற நித்திரை கொண்டுள்ளார்.

காஞ்சிபுரத்தைப் போன்று செஞ்சியும் இரு பிரிவாக இருந்துள்ளது. தற்போது உள்ள செஞ்சி "சிவ செஞ்சி" என்றும், சிங்கபுரம்-மேலச்சேரி இணைந்திருந்த பகுதி "விஷ்ணு செஞ்சி" என்றும் அழைக்கப்பட்டதாக கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன.


ஒரே கல்லில் குடைந்து இந்தப் பெருமாள் திருமேனியை வடித்துள்ளனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதரைவிட, இந்த ரெங்கநாதர் நீளமானவர் என்று கருதப்படுகிறது. சிங்கவரம் ரெங்கநாதர் 24 அடி நீளத்திற்கு பள்ளி கொண்டுள்ளார். அவரும், பள்ளியறையும் ஒரே கல்லில் உருவானவை. மகேந்திரவர்ம பல்லவனின் கலை ஆர்வத்தில் விளைந்த அற்புதம் இது..மிகப் பெரிய பெருமாளான இவரை மூன்று வாயில்கள் வழியாகச் சென்றுதான் முழுமையாகத் தரிசிக்க முடியும். முதல் நிலையில் பெருமாள் திருமுகம், மேலிருக்கும் பஞ்சமுக ஆதிசேஷன், வலது திருக்கரம், இடது திருக்கரம், கந்தர்வ பிரம்மா, மார்பில் மகாலட்சுமி ஆகியோரை தரிசிக்கலாம். மத்திய பாகத்தில் ஸ்ரீகருடன் தரிசிக்கலாம். மூன்றாம் நிலையில் திருவடி, அதன் கீழ் பூமாதேவி, நாரதர், பிரகலாதன், பிருகு-அத்திரி என்ற முனிவர்கள் ஆகியோரை தரிசிக்கின்றோம்.

ஸ்ரீ வரதராஜப் பெருமாளையும் பூதேவி, ஸ்ரீதேவியுடன் தனி சந்நிதியில் தரிசிக்கலாம். தாயார் ரங்கநாயகி தனியே அருள் பாலிக்கிறார். ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன் சிலை வடிவமும் உள்ளது. இக்கோயிலில் "சந்திர புஷ்கரணி" என்ற வற்றாத தீர்த்தக் குளம் இருக்கின்றது. மலை மீது சுற்றி வரும் போது லட்சுமி தீர்த்தம், ராமர் தீர்த்தம், வெயில் படாத சுனை ஆகியவற்றைக் காணலாம். மேலும் செஞ்சி அரச குடும்பத்தினர் வருவதற்கு, செஞ்சிக் கோட்டையில் இருந்து இக்கோயிலுக்கு வரும் சுரங்கம் ஒன்றும் உள்ளது. அதை இப்போதும் காணலாம்.

செஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராஜன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது அரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம். தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டதே... முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம். போரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார்.

மேலும் முஸ்லீம் படையெடுப்பின்போது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் உற்சவ மூர்த்தியை சிறிது காலம் தேசிங்கு ராஜா பாதுகாப்பில் சிங்கவரம் ரங்கநாதர் ஆலயத்தில் வைத்திருந்தனர்; பின்னர் காஞ்சியில் அமைதி திரும்பியதும் மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இதன் விளைவாகவே இக்கோயிலில் ஸ்ரீ வரதராஜர் சந்நிதி அமைக்கப்பட்டதாம்.

வைகுண்ட ஏகாதசி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசித்து மகிழ்கின்றனர். மாசி மகத்தன்று புதுச்சேரி கடற்கரையில் சிங்கவரம் ரங்கநாதருக்கு தீர்த்தவாரி நடைபெறும். 800 ஆண்டுகளாக இத்த வைபவம் செஞ்சி சிங்கவரம் ரங்கநாதருக்கு நடைபெறுவதாகத் தகவல்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆலயம் இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ்
உள்ளது.

மேலச்சேரி பச்சையம்மன் கோயில்



மேலச்சேரி பச்சையம்மன் கோயில் சக்தி வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. காளி, கமலக்கண்ணி, பூவாத்தம்மன், பச்சையம்மன், மாரியம்மன், செல்லியம்மன், துரோபதையம்மன் ஆகிய ஏழு கன்னியரில் ஒருத்தியே இந்த பச்சையம்மன்.

மேலச்சேரி கிராம எல்லையில், மலைகளும் அடர்ந்த வனங்களும் சூழ்ந்த அமைதியான சூழலில் அமைந்திருக்கும் பச்சையம்மன் சந்நிதிக்கு எதிரே எல்லை முனி, வாமுனி, செம்முனி, சடாமுனி, கருமுனி, பச்சைமுனி, கும்பமுனி என்னும் ஏழு முனிகள் கம்பீரமாக அமர்ந்துள்ளனர்.

செஞ்சிக்கோட்டை பகுதியை ஆண்ட தேசிங்கு ராஜாவைப் பற்றி நாம் அறிந்திருப்போம். அவனுக்கு சில தலைமுறைகள் முன்பாக ஆட்சி செய்தவன் வீரபத்திர ராஜா என்ற மன்னன். பொதுவாக தங்கள் குறைகளைக் கூற மக்கள் மன்னனை நாடி அவ்வப் போது வருவது வழக்கம். இந்த வழக்கம் சிறிது சிறிதாகக் குறைந்து, இறுதியில் மன்னனைத் தேடி யாருமே வருவதில்லை என்ற நிலைக்குச் சென்று விட்டது. இதனால் ஆச்சரியம் கொண்ட வீரபத்திர ராஜா அமைச்சர்களையும் படைத் தலைவர்களையும் அழைத்து, "மக்கள் யாரும் அரண்மனைப் பக்கம் வருவதே இல்லையே. அப்படியானால் அவர்களுக்குக் குறையென்பதே இல்லையா? பசி, பிணி, கள்வர் பயம் போன்ற எதுவுமற்று சுபிட்சமாக மக்கள் வாழ்கிறார்களா? ஆச்சரியமாக உள்ளதே! நீங்கள் நான்கு திசைகளிலும் சென்று இதற்கான காரணத்தைக் கண்டு வாருங்கள்'' என்று ஆணையிட்டான்.

அவ்வாறே சென்ற மந்திரிப் பிரதானிகள் சில நாட்களில் திரும்பி வந்து மன்னரை வணங்கி நின்றனர். "நாட்டு நிலைமை என்ன?'' என்று மன்னர் கேட்க, ""அரசே! மக்கள் எப்போதும்போல் நிறைகுறைகளோடு தான் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஒரு மாற்றுவழி கிடைத்திருக்கிறது. காஞ்சிபுரம் பக்கமிருந்து பச்சையம்மாள் என்ற பெண்மணி மேலச்சேரி வனப்பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் வந்து அமர்ந்திருக்கிறாள். ஆரம்பத்தில் அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு அருள் வாக்கு கூறியிருக்கிறாள். அது அப்படியே நடந்ததாம். இதையறிந்த ஊர்மக்கள் பச்சையம்மாளிடம் சென்று அருள்வாக்கு கேட்க, அவளும் சொல்லியிருக்கிறாள். அதன்படியே எல்லாம் நடக்க, விஷயம் நாடு முழுவதும் பரவிவிட்டது. இப்போது யாருக்கு எந்தப் பிரச்சினையென்றாலும் அந்தப் பச்சையம்மாவிடம் போய் சொல்லிப் பரிகாரம் தேடிக் கொள்கின்றனர். அதனால்தான் மன்னரான தங்களைக் காண யாரும் வருவதில்லை'' என்றனர்.

இதைக் கேட்ட வீரபத்திர ராஜாவுக்கு மீசை துடித்தது. "யாரோ ஒரு பெண் எனக்கு எதிராகப் போட்டி அரசாங்கம் நடத்துகிறாளா!"என்று கொதித்தெழுந்த மன்னன், படை பரிவாரங்களோடு பச்சையம்மாள் இருக்கும் இடம் நோக்கிப் புறப்பட்டான். அங்கே தெய்வாம்சம் திகழ பச்சையம்மாள் வீற்றிருக்க, அவளைச் சுற்றி மக்கள் பவ்யமாய் அமர்ந்திருந்தனர். அக்காட்சியைக் கண்ட மன்னன் பச்சையம்மாளுக்கு எதிரே போய் நின்று கோபமாகப் பார்த்தான். அம்மனின் பார்வை அவன்மீது பட்டதும் அவனுக்கு சப்த நாடிகளும் ஒடுங்கி விட்டன. அப்படியே அவள் பாதத்தில் விழுந்தவன், "தாயே! உங்கள் அருமையைப் பற்றி அறியாமல் கோபத்தோடு வந்த என்னை ண்ித்தருள வேண்டும்'' என்றான்.

"
அப்படி நீ வருவாய் என்பது எனக்குத் தெரியும். நாட்டுக்குக் காவலனாக இருந்த நீ, இனி எனக்குக் காவலனாக இங்கேயே இரு. நாட்டை உனது வாரிசுகள் நல்லபடி கவனித்துக் கொள்வார்கள்'' என்றாள்.

"
பெரும் பாக்கியம் தாயே!'' என்று கூறி, அங்கு காவலுக்கு அமர்ந்தான் மன்னன்.

(
இந்த நிகழ்ச்சியின் அடிப்படையிலேயே இங்கு பச்சையம்மன் கோவில் கொண்டாள். கோவிலுக்கு முன்பாக வீரபத்திர ராஜா தனி மண்டபத்தில் இருப் பதை இப்போதும் காணலாம்.)

இங்கே மக்கள் தங்கள் வேண்டுதலுக்காக வந்து படையல் போடும் போது, இந்தப் பகுதியே மிக உற்சாகமாக -கலகலப்பாக இருக்கும். மாலை ஐந்து மணி கடந்துவிட்டால் ஒரு காக்காய்கூட இருக்காது.

இக்கோவிலின் அருகிலேயே துரோபதை அம்மன் கோவில் ஒன்றும் உள்ளது. இந்த அம்மனும் சக்தி மிகுந்தவள் என்கிறார்கள். சுற்றுப் பகுதிகளில் உள்ள ஊர்களில் துரோபதை அம்மன் கோவில் கட்ட எண்ணினால், இந்த அம்மன் கோவிலிலிருந்து பிடிமண் எடுத்துச் சென்றுதான் கோவில் கட்டுவார்களாம். "எல்லா துரோ பதை அம்மன்களுக்கும் மூத்தவள் இந்த மேலச்சேரி துரோபதை அம்மன்'' என்கிறார்கள் ஊர் மக்கள்.